கவிதைகள்

வயலும் வயல் சார்ந்த இடமும்

பாவலர் வையவன்
தண்டலை மயில்கள் சாக
தாமரைக் குளங்கள் காய
கொண்டலும் பயிர்கள் வாழக்
கொடுத்தநீர் குறைந்து போக
வண்டிகள் சுமக்க வாரி
வழங்கிய வயல்கள் இன்று
அண்டிய உழவன் வீட்டு
அடுப்புபோல் காய்ந்த தம்மா!
கயலினம் சுமந்த ஓடை
கழிவுநீர் சுமக்க லாச்சு
வயல்களில் மேய்ந்த மாடு
வண்டியில் ஏற லாச்சு
கரைமரம் நிறைந்த ஏரி
கட்டிட மனைகள் ஆச்சு
உரைதிணை மருதம் இங்கு
உருத்தெரி யாமல் போச்சு!
நெற்களம் மட்டைப் பந்தின்
நேர்திடல் ஆன திங்கே
புற்களைச் சுமந்த பூமி
புதுப்புது நோய்க்குள் ளானாள்
சொற்களால் பெருமை யன்றி
சோகமே உழவன் சொத்து
தற்கொலை மூன்று போகம்
தவறாமல் விளையு தம்மா!
விலங்குகள் பறவை மற்றும்
விரிபுவி உயிர்கள் எல்லாம்
தொலைந்துதான் போன தன்றி
தோற்றது உழவர் வாழ்வும்
மலர்ந்திடும் அணு ஒப் பந்தம்
மாறிடும் நூறு ஆட்சி
உலர்ந்திடும் மருதம் கண்டு
உணர்ச்சி நீ கொள்வாய் தோழா!



xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

தெளிவு

பாரதியார்
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்கமுண்டோ?

உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ? - மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?

சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால், - மனமே,
எத்தனை கோடி யிடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிதுமுண்டோ?

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தேவ னுரைத்தனனே; - மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்
கச்சமு முண்டோடா? - மனமே!
தேன் மடை யிங்குத் திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா! 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மனப்பெண்

பாரதியார்
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை யஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை யணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமைகா ணோமெனப் பொருமுவாய், சிச்சி!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததி லிசைவாய்.
அங்ஙனே
என்னிடத் தென்று மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்
கண்ணினோர் கண்ணாய்க் காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை
உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்,
இன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்,
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,
தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,
தன்பின் னிற்குத் தனிப்பரம் பொருளைக்
காணவே வருந்துவாய், காணெனிற் காணாய்,
சதத்தின் விதிகளைத் தனித்தனி யறிவாய்,
பொதுநிலை யறியாய், பொருளையுங் காணாய்,
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழு நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்; நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியுத் தேடுவேன்;
உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக் கின்ப மோங்கிடச் செய்வேன். 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

செய்யும் தொழிலே தெய்வம்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி - கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி (செய்யும்)

பயிரை வளர்த்தால் பலனாகும் - அது
உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும் - இந்த
வேர்வைகள் எல்லாம் விதையாகும்
தினம் வேலையுண்டு குல மானமுண்டு
வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம் (செய்யும்)

சாமிக்குத் தெரியும், பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலைமை - அந்தச்
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை - இதைப்
பாடிப்பாடி விளையாடி ஆடிப்பல
கோடிக் கோடி முறை கும்பிடுவோம் (செய்யும்)

காயும் ஒரு நாள் கனியாகும் - நம்
கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும் - நம்
கனவும் நினைவும் நிலையாகும் - உடல்
வாடினாலும் பசி மீறினாலும் - வழி
மாறிடாமலே வாழ்ந்திடுவோம் (செய்யும்) 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நட்பு

வைரமுத்து
"நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
பூரணமாய் இருக்கும்

நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும்
ஓயாமல் அலைந்து வரும்

நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்

நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஓரே மட்டமாய் இருக்கும்

நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தாங்கிக் கொள்ளும்

நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடத்திலும்
நிறைந்து இருக்கும்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அலைகள்

வைரமுத்து
அலைகளே! நீர்மேல் ஆடுந் தண்ணீர்
மலைகளே! கடலின் மந்திரக் கைகளே! வித்தை புரிந்து வீசுங் காற்று
நித்தந் திரிக்கும் நீர்க்கயி றுகளே!
காற்றெனுங் கயவன் கடலாம் கன்னியின்
மேற்புறம் உரியும் மெல்லிய துகில்களே!
கரையில் தற்கொலைக் காரியம் நடத்தல்
முறையா? சரியா? முடிவுரை என்ன?
கண்வழி புகுந்து கனவென மலர்ந்து
வெண்துகில் போர்த்து மேலே எழுந்து
விம்தித் தாழ்ந்த வெண்மார் புகளே!
தம்பலம் காட்டும் தண்ணீர் வெடிகளே!
கடல்நீர் விழாவில் கரக ஆட்டம்
நடத்தித் தோற்கும் நாடகக் கும்பலே!
கருப்புக் கடலுக் காசநோ யாலே
இருமித் துப்பும் எச்சில் மலைகளே!
கறுப்புக் கடற்றயிர் கடையப் படுகையில்
தெறித்த வெண்ணெய்த் திரைகளே! நீங்கள்
கரையில் கலையும் கடலின் கனவுகள்
கரைக்கன் னத்தில் கடல்முத் தங்கள்
நகர்ந்து விரைந்து நடந்து கரையில்
தகர்ந்து போகும் தண்ணீர்ச் சுவர்கள்

No comments:

Post a Comment