இலக்கியம் - கட்டுரைகள்

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு!


கூடல் - 12 January, 2011


இயற்கை இன்னல்கள் பலவற்றையும் தாங்கிக் கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கு பறை சாற்றும் மகத்தான திருநாள் தை பொங்கல் தினம் ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொரு விவசாயக் குடிமகனும் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், மஞ்சள், கரும்பு போன்றவற்றுடன் சர்க்கரை பொங்கல் படையல் வைத்து, மாவிலை தோரணம் கட்டி இயற்கையையும், சூரியனையும் வழிபடும் தமிழர் திருநாள் தை பொங்கல். தை பொங்கல் விழா தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

காளைகளை அடக்கும் திருவிழா ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற அயல்நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அது கூர்மையான வாளைக் கொண்டு காளையை காயப்படுத்தி அடக்கும் விளையாட்டுகளாகும். ஆனால் தமிழகத்தில் கொம்புகள் கூர்சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு தனித்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல, தமிழரின் வீரத்திற்கும், வீரத்துடன் ஒன்றிணைந்த பண்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கிறது.

4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இந்த முத்திரை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது.

மேலும் தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்திய எழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதை கடந்த 1977ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டது. இந்த முத்திரை கி.மு. 2000-ம் ஆண்டை சேர்ந்தது. இதை பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிந்து சமவெளி நாகரீக காலத்தில் நடைமுறையில் இருந்த ஜல்லிக்கட்டை இந்த முத்திரை பிரதிபலிப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதில் உள்ள படத்தை வைத்து இருவிதமான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒருசாரார் ஒரு காளை ஒன்றுக்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களை தூக்கி வீசுவதாக கூறுகிறார்கள். 2 வீரர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும், ஒரு வீரர் காளையை பிடிக்க முயல்வது போலவும், மற்றொருவர் பல்டி அடிப்பது போலவும், 5-வது நபர் தரையில் விழுந்து கிடப்பது போலவும் இந்த சித்திரம் அமைந்திருப்பதாக கூறுகிறார்கள்.

தமிழர் இலக்கியத்தில் "கொல்லேறு தழுவல்" என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது.

இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் ஒரு முறை இறங்கிய காளையர் எவரும் அடுத்த ஆண்டும் இறங்கி தங்கள் திறனை தொடர்ந்து நிரூபிக்காமல் இருப்பதில்லை. உடல் பலம் உள்ளவரை ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு, தங்கள் உயிரை பணயமாக வைத்து தமிழரின் வீர மரபை தொடர்ந்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடக்கும் பல ஊர்களில் ஒரு காலத்தில் தீவிரமாக காளை அடக்குவதில் போட்டி போட்டவர்கள், இன்று வயது முதிர்ந்த நிலையிலும் கூட, ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் பட்டிக்குச் சென்று, சீரிக் கொண்டு பாய்ந்துவரும் காளை ஒன்றை தொட்டுவிட்டு வீடு திரும்பும் வழக்கம் இன்றும் உள்ளது.

ஜல்லிக்கட்டு! தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றட்டும்.










xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx





வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி


நா. தனராசன் - 1 March, 2010


திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று அது ஒரு வாழ்வியல் நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக மட்டுமல்ல, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல். வள்ளுவத்தின் பொருண்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது.


பொருண்மைச் சிறப்பு


சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும் மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது. வள்ளுவம் "தமிழனுக்குரியது" என்னும் நிலையைக் கடந்து உலகத்தவர் அனைவர்க்கும் உரியதாக உள்ளமையை உணர்ந்த பாரதி "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு", எனப் புகழ்ந்துரைத்தார். வள்ளுவப் பொருட் சிறப்பை அறிந்த மதுரைத் தமிழ் நாகனார் "எல்லாப் பொருளும் இதன் பால் உள" என்று தெளிந்துரைத்துள்ளார். இவை வள்ளுவத்தின் காலமும் எல்லையும் கடந்து நுண்பொருட்ச் சிறப்பை உணர்த்துவன.






வாழ்வியல் பதிவு


வள்ளுவம் தான் தோன்றிய காலத்தோடு நின்று விடாமல் இந்த நூற்றாண்டு மனிதனுக்கும் வாழச்சொல்லிக் கொடுக்கிறது. வாழ்க்கையைச் சொல்லிக் கொடுக்கிறது. வள்ளுவம் இலக்கியம் என்னும் நிலையில் நின்று விடாமல் மனித வாழ்வியல் கூறுகளை காட்டும் பதிவுகளாக உள்ளது.இதனை சராசரி மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஒழுகவேண்டிய நெறிமுறைகளின் தொகுப்பாகத் திருக்குறள் படைக்கப்பட்டுள்ளது.


என்னும் அறிஞர் கருத்தினால் அறியலாம். வள்ளுவத்தில் உள்ள ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கையின் நெறிகளை, வழிமுறைகளைத் தருவன.


மானிடப் பண்பு இயல்புகளுக்கு ஓர் உறைவிடமாய் - வாழ்க்கை, வழி நெறிமுறைகளுக்கான வழிகாட்டியாய் அமைந்துள்ளது திருக்குறள்


என்னும் முத்தமிழ் அறிஞரின் கருத்தும் வள்ளுவம் ஒரு வாழ்வியல் நூல் என்பதை உறுதிப்படுத்துகிறது.






முதன்மைப் பயன்






உயிரினத்தின் உச்சியில் வாழும் இன்றைய மனிதனை, அவனது வாழ்க்கையைப் பகுத்து நோக்கி, அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மைப் பயனை அறிய வைத்துப் பயனுடைய வாழ்க்கை வாழ வள்ளுவம் வழி காட்டுகிறது. எதிலும் விரைவும், ஓட்டமும் காட்டும் இந்த நூற்றாண்டு மனிதனுக்கு உள்ளத்தை உறுதிப்படுத்தவும் வாழ்வியல் பொருண்மைத் தெளிவுபெறவும் வள்ளுவர் வாக்கு ஊன்றுகோலாய் இருக்கிறது.






பன்முகப்பார்வை






தனி மனிதநிலை, குடும்ப நிலை, உறவினர் நிலை, சமூக உறுப்பினர் நிலை, குடிமக்கள் நிலை என்னும் தளங்களில் மனிதர்கள் பாதுகாக்க வேண்டிய பண்புகள், ஆற்ற வேண்டிய பணிகள், எனப் பன்முகக் கூறுகளை ஒழுங்குற அமைத்து ஒரு முழுமையான வாழ்வியல் கருத்தாக்கத்தை வள்ளுவம் தந்துள்ளது.


தமிழ்ச் சமுதாயத்தில் காலங்காலமாய் இருந்து வந்த மரபுத்தளைகளை உடைத்து, மனிதப் பழக்க வழக்கங்களை மாற்றித் தனிமனிதத் தூய்மையை உருவாக்க வள்ளுவர் முயன்றுள்ளார்.


மரபுகளைத் தகர்த்தல்


மது அருந்துதலும் புலால் உண்ணுதலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்கம் என்னும் நிலையை மாற்றி மனித மனத்தினை, வாழ்வின் பயனைத் தடம்மாற்றும் தவறுகள் என வள்ளுவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


இலங்கு இழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும


எனவும்


சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்தது உண்ணும் மன்னே


என்றும் கள்ளுண்டுகளித்தலையும், கள்ளுண்ணல் பெருமித வாழ்வாக இருந்த மரபுகளையும் பின்பற்றக் கூடிய ஒழுக்கமாய்க் காட்டும் வழக்கினை மாற்றி அதனைச் சமுதாயத் தீமையாக உரைத்தவர் வள்ளுவர்.


"உண்ணற்க கள்ளை" என்றும் அது "ஈன்றாள் முகத்தேயும் இன்னாதது" எனவும் "நஞ்சுண்பார் கள் உண்பவர்" என்றெல்லாம் மது அருந்துதலின் தீமையை உணர்த்தித் தனிமனித வாழ்வு சிறக்கும் நெறியைக் காட்டியுள்ளார் வள்ளுவர் எனலாம்.


புலால் உண்பது மனித நெறி அல்ல என்பது வள்ளுவரின் கருத்தாக உள்ளது. இன்றைய மனிதர்களின் உணவு முறையில் சைவ உணவே சிறந்தது என்பதை அறிவியல் ஆய்வுகள் மூலம் மேலைநாட்டு உணவியல் வல்லுனர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். தெய்வப் புலவர் வள்ளுவர் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்துள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதனை விளக்கமுறச் செய்துள்ளார்.


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்


என்னும் குறட்பா மனிதன் உயர்வதற்கான வழியைக் காட்டுகிறது. இன்றைய தமிழக அரசு உயிர்க்கொலை, உயிர்ப் பலி கூடாது எனச் சட்டம் கொண்டு வந்துள்ள நிகழ்காலச் சூழலில் வள்ளுவரின் வாழ்வியல் நெறி வெற்றி பெற்றுள்ளதாகவே கருதலாம். அன்பு, பண்பு, நட்பு போன்ற வாழ்வியல் இலக்குகளை எளிய முறையில் மனித மனம் ஏற்கும் வகையில் உரைத்துத் தனி மனித வாழ்க்கையை வள்ளுவர் பண்படுத்தியுள்ளார்.






அறநெறிப்பட்ட வாழ்க்கை






மனித வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்றுவிடாமல் விரிந்து பரந்து முக்கியத்துவம் மிக்கதாக அமைய வேண்டும். மனித மனங்களை விரிவுபடுத்தி அறவழிப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவது திருக்குறளின் நோக்காகவும் உள்ளது.


மனமாசின்றி வாழும் வாழ்க்கை சிறப்புடையது. அதுவே அறங்களில் முழுமை. மனித வாழ்க்கை நெறி என்கிறார்.


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.


என்னும் குறட்பா இதனை உணர்த்துகிறது. அறம் என்பது பற்றிய இலக்கிய மரபுசார் கருத்தாக்கத்தை வள்ளுவர் மாற்றியமைக்கிறார்.


அறமெனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாத இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்


என்னும் காப்பியக் கருத்தினை மறு ஆய்வு செய்து அறத்திற்குப் புதிய விளக்கங்களைத் தந்தவர் வள்ளுவர். மனத்தூய்மை, ஈகை, காதல் என்னும் தூயநெறிகளை வாழ்வியல் அறமாகக் கொள்ள வேண்டியதின் தேவையை உணர்த்தியுள்ளார்.






வாய்மை






திருக்குறள் அன்பு, பண்பு, இன்சொல், நன்றியறிதல் என மனித மாண்புகளை விளக்குகிறது. இவற்றைப் பின்பற்றுவோர் பேற்றினையும் ஒதுக்கியவர் அடையும் இழிவினையும் திறம்படக் காட்டுகிறது. "வாய்மை" என்பதே தலையாய அறம் என்கிறது வள்ளுவம். பொய்மை கோலோச்சும் இக்கால மனித சமுதாயத்திற்கு வள்ளுவர் கருத்துக்கள் மலர்ச்சியை உண்டாக்கும் மருந்தாகக் கொள்ளலாம். அறங்களில் எல்லாம் வாய்மையே சிறப்புடையது என்பதை


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று


என்னும் குறட்பாவால் அறிய முடிகிறது.






மும்மை அறம்


மனிதர்களின் வாழ்க்கை நெறியை உயர்த்தும் கோட்பாடாக வள்ளுவம் மூன்று அறங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது.


1. ஆன்மீக அறம்; 2. ஈதல் அறம்; 3. காதல் அறம்


கடவுளை "அறிவு, ஆற்றல், அப்பாற்பட்ட நிலை" என்றும் கருதுகோள் நிலையில் வைத்து மனித ஒருமைக்கும் சமுதாய அமைதிக்கும் வள்ளுவர் குறள் வழிக் குரல் கொடுத்துள்ளார். முதற் குறட்பாவில் "உலகு" என நினைவூட்டி உலகளாவிய நேயத்தை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்ளும் மனிதனுக்கு, அவனது மனமாற்றத்திற்கு வள்ளுவம் ஒரு புதிய ஆன்மீக அறத்தை தந்துள்ளது. இதனை,


வள்ளுவம் கடவுளை நம்புகிறது. ஆனால் அது ஆணும் அல்ல; பெண்ணுமல்ல. வள்ளுவம், காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள், கோட்டைகள் இல்லை. வள்ளுவத்தின் கடவுளுக்குக் கணக்கும் இல்லை; வழக்கும் இல்லை. அது பேரறிவு; தூய்மையான அறிவு; குணங்களின் திருவுரு; இன்பத்தின் திருவுரு; அன்பின் திருவுரு; அறத்தின் அடையாளம்!


என்னும் அறிஞர் கருத்தும் இதனைத் தெளிவுபடுத்தும்.






ஈதலறம்


மனிதப் பண்பினை உயர்த்தும் ஒரு நெறி ஈகை. பிறருக்குக் கொடுத்து மகிழும் மனம் பெற்றால் மனிதன் பக்குவம் அடைந்தவனாகிவிடுவான். போட்டியும், பொறாமையும் அடுத்தவர் பொருளைக் கவரும் எண்ணமும் மனிதனை மிருக நிலைக்குக் கொண்டு செல்லும். ஈகைக் குணம் ஒன்றே மனிதனை மாண்புடையவனாக்கும். வள்ளுவர் ஈகைக் குணமே உயிரின் ஊதியம் என்பர்.


ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்ல
ஊதியம் இல்லை உயிர்க்கு


கொடுத்துப் புகழடையும் வாழ்க்கையே பயனுடைய வாழ்க்கை என்பதைக் குறள் உணர்த்துகிறது.






காதலறம்


காமத்துப்பால் அறவழிப்பட்ட காதலுறவுகளை எடுத்துரைத்துள்ளது. காதலையும், ஆண்-பெண் உறவையும் வள்ளுவர் நெறிப்படுத்தியுள்ளார். காமத்துப்பாலில் காதல், காதலர் உறவு நிலை ஆகியவற்றை இனிமை பயக்கப் பாடி, அன்பெனும் நெறிக்குள், மனங்களின் சங்கமத்திற்குள், மாசுபடாத வாழ்வியல் படிநிலையை வடித்துத் தந்துள்ளார். களவையும் கற்பையும் வகைப்படுத்தி "மனிதம்" அடையும் வாழ்க்கை நெறியை வள்ளுவர் தந்துள்ளார்.


பிறன்மனை நயத்தலையும், பரத்தையர் உறவையும், பெருங்குற்றமாகச் சொல்லி அன்புடைய காமத்தைச் சமுதாய அறமாகத் தந்துள்ளார்.


ஆண் - பெண் சமனியம்


ஆண் - பெண் உறவு நிலை, திருமணத்திற்கு முன்னும் பின்னுமாகக் காதல் நிலை ஆகிய செய்திகளைக் குறள் விரிவாகப் பேசுகிறது. ஆண் - பெண் சமத்துவம் வள்ளுவரின் கொள்கையாகக் காணப்படுகிறது.


ஆண் மேலாதிக்க காலத்தில், அதற்கெதிரான, துணிவுடைய சிந்தனைகளை வழங்கியுள்ள வள்ளுவரின் அணுகுமுறை புரட்சிகரமானது. பெண்களின் உரிமைக்காகவும், உலகியல் மாற்றத்திற்காகவும் அவர் பாடுபட்டுள்ளார். பெண் ஆணுக்கு இணையானவள். ஆற்றல் மிக்கவள் என்பதை,


சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை


என்று ஆற்றலும் அறிவும் நிறையும் மிக்க பெண்களை உலகுக்கு உருவாக்கித் தந்தவர் வள்ளுவர் எனலாம். இத்தகைய வள்ளுவரின் வழிகாட்டல்தான் பிற்காலத்தில் பாவலன் பாரதியை "வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்" என்று பாட வைத்தது எனலாம.






சமுதாயக் கொடுமைகள்


சாதி, மதத்தின் பெயரால் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் சமுதாயக் கொடுமைகள். இதனை மாற்ற வள்ளுவரின் குறட்பாக்கள் முனைந்துள்ளன. பிறப்பால் இனம் பிரித்த வருணாசிரம முறையை வள்ளுவம் எதிர்க்கிறது. பிறப்பால் அனைவரும் ஒன்றே என ஓங்கி ஒலிக்கிறது.


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்


என்னும் குறட்பா வள்ளுவரை ஒரு சமுதாயப் புரட்சியாளராக அடையாளம் காட்டுகிறது.






பகுத்தறிவு நோக்கு


வள்ளுவரைத் தமிழ்கூறும் உலகில் தோன்றிய முதல் "பகுத்தறிவாளர்" எனக் கூறலாம். எந்தவொரு கருத்தையும், சிந்தனையையும் உள்ளவாறு ஏற்காமல் பகுத்து நோக்கி, உள்ளத் தெளிவு பெற்று ஏற்க வேண்டும் என்பதே வள்ளுவர் கொள்கை.


எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு


என்னும் குறட்பாக்கள் இதற்குச் சான்றாகும்.






மானுடத்தின் மலர்ச்சி


வள்ளுவரின் நெம்புகோல் அடிகள் மானுடத்தின் மலர்ச்சி எனலாம். மரபுகளைத் தகர்த்துப் புதுமையை நிலை நிறுத்துவது வள்ளுவரின் சமுதாயப் பணியாக இருக்கிறது.


அந்தணர் என்போர் அறவோர்
அன்பின் வழியது உயிர்நிலை


மனநலம் மன்னுயிர்க்குக் காக்கம்
அறத்தால் வருவதே இன்பம்


என்றெல்லாம் உயரிய சிந்தனைகளை வழங்கி மனித வாழ்க்கையை மலர்ச்சியடையச் செய்தவர் வள்ளுவர் ஒருவரே எனலாம்.






அடிக்குறிப்புகள்


1. பாரதியார், பாரதியார் கவிதைகள், வானதி பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு, 1883, ப. 39.


2. மதுரைத் தமிழ் நாகனார், திருவள்ளுவ மாலை, திருக்குறள் - பரிமேலழகர் உரை, கழக வெளியீடு, சென்னை, 1964, ப. 408.


3. ந. முருகேச பாண்டியன், "திருவள்ளுவர் என்ற மனிதர்", வள்ளுவம் இதழ் (வைகாசி - ஆனி) திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மே - 2000.


4. மு. கருணாநிதி, "திருக்குறள் என் சிந்தனையை நெய்திருக்கும் செந்நூல்", கோட்டம் முதல் குமரி வரை, குமரி முனை திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மலர், ப. 8.


5. மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி, கழக வெளியீடு, சென்னை, பாடல் வரிகள், 778-782.


6. புறநானூறு, கழக வெளியீடு, சென்னை, பாடல் எண். 235.


7. சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை, பாரி நிலையம், சென்னை, எட்டாம் பதிப்பு, 1987, ப. 306.


8. குன்றக்குடி அடிகளார், வள்ளுவத்தின் சமயவியல், வள்ளுவம் இதழ் (பங்குனி - சித்திரை), திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மார்ச் 1999, ப. 11.






முனைவர் நா. தனராசன்
முதுநிலை விரிவுரையாளர் தமிழ்த்துறை
ம.இரா. அரசினர் கலைக் கல்லூரி
மன்னார்குடி - 614 001.


2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.













xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx







சிறுமியர் விளையாட்டுக்கள்


முனைவர் வே.சசிகலா - 25 January, 2010



1. முன்னுரை - விளையாட்டு விளக்கம்


விளையாட்டு என்பது சிறுவர்க்கு உரியது. "பாலர்களுக்கு அழகு விளையாட்டு" என்கிறது ஒரு வடமொழிப் பழமொழி. "விளையாட்டாவது விரும்பியாடும் ஆட்டு" என்கிறார் பாவாணர். (தமிழ் நாட்டு விளையாட்டுக்கள், ப.196) "விளை" என்பது விருப்பம் என்பதைக்குறிக்கும். "ஆட்டு" என்பது ஆட்டம் என்பதாகும் சிறுவர்கள் தாமாக விரும்பி அதில் ஒன்றி ஆடுவது விளையாட்டாகும். மனம் லயித்து ஆடும் விளையாட்டுகள் கிராமப்புறங்களில்தான் இன்றளவும் ஆடப்படுகின்றன. இன்றைய சூழலில் கல்விக் கூடங்களில் "விளையாட்டு" என்பதுற்குத் தனி வகுப்புகள் ஒதுக்கப்பட்டு, ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். எனினும் அவை உண்மையில் விரும்பி ஆடும் ஆட்டமா என்பது கேள்விக்குறியே, ஏனெனில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நபர்களுடன் விளையாட வேண்டுமென்ற வரையறை கல்வி நிலையங்களில் காணப்படுகிறது.


இது போலன்றி இயல்பாகப் பலரோ, சிலரோ கூடி தங்கள் விருப்பப்படி விளையாட்டைத் தேர்ந்தெடுத்து விதிமுறைகளை வரையறுத்து, ஓர் ஒழுங்கு முறையை அமைத்துக் கொண்டு வெற்றி தேல்விக்கான வரன் முறைகளைத் தீர்மானித்து ஆடுவதே விளையாட்டாகும். நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியர் இங்ஙனம் பல விளையாட்டுக்களை விளையாடுகின்றனர். பெரிய நகர்ப்புறங்களிலும் ஓரளவு கிராமச்சூழலிலும் கிரிக்கெட் விளையாட்டு விளையாடப்படுகிறது என்றாலும் நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியர் ஆடும் விளையாட்டுக்கள் மிகுதி. நாட்டுப்புற விளையாட்டுக்களைச் சிறுவர்க்குரியவை, சிறுமியர்க்குரியவை, இருபான்மையர்க்கும் உரியவை என்று வகைப்படுத்தலாம். இக்கட்டுரை சிறுமியர்க்குரிய விளையாட்டுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டமைகிறது.






2. சிறுமியர் விளையாட்டுகள்


தென்காசி வட்டாரத்தில் தட்டாங்கல், பல்லாங்குழி, பூப்பறிக்க வருகிறோம் பாட்டி பேத்தி, அல்லி மல்லி தாமரை, செங்கல் எடுத்துச் சிறு வீடு கட்டு, டில்லி அக்கா தண்ணிக்குள்ள, அக்கக்கா கிளி செத்துப் போச்சு, உருண்டை உருண்டை கல்லெடுத்தல், குளத்துக்குள்ள கரை மேல, கீ கீ ரோஜா, ஈஞ்சக்காத்தண்ணி இறைப்பேன், ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூப் பூத்தது, கிச்சு கிச்சுத் தாம்பாளம், வெத்தலப் பெட்டியைக் காணல, வளையல் விளையாட்டு, பானை சட்டி, நொண்டி, ஆபத்துக்கு கை கொடுத்தல், பூச்சொல்லி விளையாட்டு, சூடு சூப்பி, துணி துவைத்தல், அக்கக்கா சிணுக்கோரி, மெல்ல வந்து கிள்ளிபோ ஆகிய சிறுமியர் விளையாட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.






2.1. பங்கு பெறுவோர்


கண்டறியப்பட்ட விளையாட்டுகளில் இருவர் ஆடுவது, பலர் ஆடுவது ஆகிய இருபிரிவு விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. பலர் ஆடும் விளையாட்டுகளில் ஒருவர் தலைமை பெறுவதும், இருவர் தலைமை பெறுவதும் காணப்படுகிறது. அதாவது பலர் ஆடிய போதிலும் ஒருவர் ஒருவராக இருவர் இருவராக ஆடும் முறை உள்ளது. சான்றாகப் பாட்டி பேத்தி விளையாட்டைக் குறிப்பிடலாம். பாட்டி பேத்தி விளையாட்டு பலர் ஆடும் வகையானது. எனினும், பாட்டி பேத்தி பங்கினை ஏற்போர் நிகழும் உரையாடல் இவ்விளையாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. சான்றாக.


"பாட்டி பாட்டி என்ன வேணும்

தின்ன வேணும் என்ன தின்ன வேணும்"


என்பதைக் குறிப்பிடலாம்.


தட்டாங்கல், பல்லாங்குழி, ஈஞ்சக்காத் தண்ணி இறைப்பேன், கிச்சு கிச்சுத் தாம்பாளம் ஆகியன நான்கும் இருவர் ஆடும் விளையாட்டுக்கள். பிற அனைத்தும் பலர் அடங்கிய குழுவினர் ஆடும் விளையாட்டுக்களே. அவற்றுள்ளும் பாட்டிபேத்தி, வெத்தலைப் பெட்டியைக் காணல, கயிறு குதித்தல், பூப்பறிக்க வருகிறோம், ஆகியன ஒருவர் ஒருவராக அல்லது இருவர் இருவராக ஆடும் விளையாட்டுக்களாகும்.






2.2 விளையாடும் முறை


சிறுவர் விளையாட்டுகளினின்றும் பெரிதும் வேறுபடும் சிறுமியர் விளையாட்டுக்கள் ஓரிடத்தில் அமர்ந்தோ அல்லது வட்டமாக நின்று கொண்டோ, ஆடுபவையாக உள்ளன. தட்டாங்கல், பல்லாங்குழி, அல்லி மல்லி தாமரை, உருண்டை உருண்டை, அக்கக்கா கிளி செத்துப்போச்சு, கிச்சு கிச்சு தாம்பாளம் வளையல் விளையாட்டு, பானை சட்டி, பூச்சொல்லி, அக்கக்கா சிணுக்கோரி ஆகிய விளையாட்டுக்கள் ஓரிடத்தில் அமர்ந்து ஆடும் வகையின, பூப்பறிக்க வருகிறோம் பாட்டி பேத்தி, செங்கல் எடுத்து சிறு வீடு கட்டு, கல்லெடுத்தல், குளத்துக்குள்ள கரைமேல, கீ கீ ரோஜா, ஈஞ்சக்காத் தண்ணி இறைப்பேன், மெல்ல வந்து கிள்ளி போ, வெத்தலைப் பெட்டியை காணல, துணி துவைத்தல் கயிறு குதித்தல் ஆகியன ஓரிடத்தில் நின்று கொண்டு ஆடும் வகையின, டில்லி அக்கா தண்ணிக்குள்ள நொண்டி, ஆபத்துக்குக் கை கொடுத்தல், ஆகிய விளையாட்டுக்கள் மட்டுமே ஓடி விளையாடும் விளையாட்டுகளாகும்.


சிறுமியர் விளையாட்டுக்கள் விளையாடப்படும் முறையை நோக்கினால் இவை உடல் வலிமையை வளர்க்கும் நோக்கத்திற்காக ஆடப்படுவதில்லை எனலாம். பொழுது போக்குதல், கூடி மகிழ்தல் ஆகியவற்றுக்கே சிறுமியர் விளையாட்டுக்கள் முக்கியத்துவம் தருகின்றன.






2.3. விளையாடுமிடம்


சிறுமியர் விளையாட்டுக்கள் யாவும் அவர்கள் வசிக்கும் இல்லங்களை ஒட்டியே ஆடப்படுகின்றன. அவற்றுள் அமர்ந்து ஆடும் விளையாட்டுக்கள், வீட்டுக்குள்ளே விளையாடப்படும் பலர் கூடி விளையாடுவதற்கு வீட்டு முற்றங்களே போதுமானவை. வெளி இடங்களில் விளையாடப்படும் விளையாட்டுக்களாகிய நொண்டி முதலியனவற்றிற்கும் வீட்டைச் சுற்றியுள்ள ஒரு எல்லை வரையறுக்கப்டுகிறது.


"சிறுமியர் வயது வந்த சமூகத்தினருக்குக் கட்டுப்பட்டோர் என்ற முறையில் அச்சமுகத்தினரின் எதிர்பார்ப்புகளுக்கும், செல்வாக்கிற்கும், கட்டுப்பட்டவர்கள் பெண் மக்கள். பெற்றோர் கட்டுபாடின்றி அவர்களை தொலைதூரத்திற்குப் போக அனுமதிப்பதில்லை" (தே.லுர்து, நாட்டார், வழக்காற்றியல் சில அடிப்படைகள் ப.333) எனவே நாட்டுப் புறங்களில் சிறுமியர் விளையாட்டுக்கள் சமுக ஒப்புதலுடன் நிகழத்தான் வாய்ப்புள்ளன.






2. சிறுமியர் விளையாட்டுகளின் தன்மைகள்


விளையாட்டுக்களில் சிறுமியர் விளையாட்டுக்கள் சிறுவர் விளையாட்டுக்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. சிறுமியர் விளையாட்டுகளிலிருந்து ஓடுதல், சாடுதல், தவ்வுதல், குதித்தல் தொங்குதல் போன்ற செயல்கள் அவற்றையும் சிறுமியர் விளையாட்டில் காண்பதரிது. சிறுமியர் விளையாட்டுக்கள் ஆடும் முறை ஆடும் இடம் போன்றவற்றால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகின்றன. வருங்காலப் பெண் என்ற அடிப்படையில் கீழ்படிதல் (தலைமை இருக்கும் விளையாட்டுக்களில்) பொறுப்புணர்வு (ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூப் பூத்தது) சுய கட்டுப்பாடு (கயிறு குதித்தல்) போன்ற பண்புகளை வளர்க்கும் விதத்தில் சிறுமியர் விளையாட்டுக்கள் அமைந்துள்ளன. "கட்டுப்பாடு" என்பதனை அவை பெரிதும் வலியுறுத்துகின்றன. சிறுமியர் விளையாட்டுக்களில் அமர்ந்து ஆடுதல், நின்று ஆடுதல் என்ற இருவகைகள் இதனைத் தெளிவாக்குகின்றன. ஓரிடத்தில் அமர்ந்து இருத்தல் என்பதே ஒரு வகை கட்டுப்பாடு. நின்னு ஆடும் விளையாட்டுக்களில் கூடப் பலவற்றில் வட்டமாக நிற்க வேண்டும் என்ற விதத்தில் உள்ளது. வட்டம் அமைத்து அந்த வட்டத்தில் நின்றுதான் விளையாடவேண்டும். என்பததைப் பலர் கூடி ஆடும் விளையாட்டுக்கள் உணர்த்துகின்றன. இவ்விளையாட்டுக்கள் வட்டத்தில் நிற்க வைக்கும் கட்டுப்பாட்டை வலியுறுத்துகின்றன.






4. பண்பாட்டுக் கூறுகள்


சிறுமியர்களின் விளையாட்டுக்கள் பண்பாட்டுக்கூறுகள் பலவற்றை எதிரொலிக்கின்றன. சிறுமியர் விளையாட்டுக்களில் பேச்சின்றி ஆடப்படுபவை வெகு சிலவேயாகும். பாடல் பாடிக் கொண்டோ உரையாடிக்கொண்டோ நிகழ்பவையாகப் பல சிறுமியர் விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. விளையாட்டுக்களில் பாடப்படும் பாடல்களிலும், நிகழும் உரையாடல்களிலும் உறவு முறைகள், அவற்றின் தன்மைகள் குறிப்பிடப்படுகின்றன. சான்றாக உருண்டை உருண்டை விளையாட்டில்,


"அடுப்புக்குள்ள மோதிரம் போட்டா

யார் எடுத்தா?

அம்மா எடுத்தா

அம்மன் கோயிலைக் கும்பிட்டு எடுத்தா

உருண்டே உருண்டே".


என்ற பாடல் பாடப்படுகிறது. இதில் "தாய்" உறவு குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமின்றித் தாய் அம்மனை வழிபடும் வழக்கமும் இடம் பெறுகிறது. கீ கீ ரோஜா என்னும் விளையாட்டில் "எந்திரி பாப்பா எந்திரி" என்று பெண் பிள்ளை குறிக்கப்படுகிறாள். மேலும் "கண்ணீரைத்துடை" என்ற அடுத்த வரி பெண்களுக்குரிய இரக்ககுணத்தைக் குறிப்பிடுகிறது. பாட்டி பேத்தி விளையாட்டு மாமன் உறவினை எடுத்துரைக்கிறது.


"எங்க போனீங்க

மாமா வீட்டிற்கு

என்னென்ன தின்னீங்க

லட்டு பூந்தி மிக்சர் அல்வா

எனக்கு

ஐய்யய்யோ இல்லையே".


என்ற பாடல் வரிகளில் மாமன் வீட்டுக்குச் செல்லுதலும், திண்பண்டங்கள் தின்னுதலும் உரைக்கப்படுகின்றன. தாய் இறைவழிபாடு பாப்பா, கண்ணீர் துடைத்தல் மாமன்-தின்னத் தருதல் என்ற நிலையில் உறவுமுறைகள் அவற்றின் செயல்பாடுகள் ஆகியன உணர்த்தப்படுவது மிக சிறந்த பண்பாட்டுப் பிரதிபலிப்பு எனலாம்.


சிறுமியர் விளையாட்டுக்களில் பெண்களுடன் தொடர்புள்ள பல பொருட்கள் இடம் பெறுவதைக் காணமுடிகிறது. பூக்கள் அணிகலன்கள் ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன. அல்லி மல்லி தாமரை என்னும் விளையாட்டில் பூக்களின் பெயர்கள் தாள்களில் எழுதிப் போடப்பட்டு விளையாட்டு நிகழ்கிறது. பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டில் சிறுமியர் பல பூக்களின் பெயர்களைத் தங்களுக்குச் சூட்டிக் கொண்டு விளையாடுகின்றனர். உருண்டை உருண்டை விளையாட்டில் மோதிரம் என்றும் அணி குறிக்கப்படுகிறது.


இது தவிரப் பெண்களுடன் தொடர்புடைய பல பொருட்கள் சிறுமியர் விளையாட்டுக்களில் குறிக்கப்படுகின்றன. ஈஞ்சக்காத் தண்ணி இறைப்பேன் விளையாட்டில் மஞ்சள் குறிக்கப்படுகிறது. வெத்தலைப் பெட்டியைக் காணல விளையாட்டில் வெத்தலைப் பெட்டி, நெல், சுண்ணாம்பு ஆகியன குறிக்கப்படுகின்றன. பானைசட்டி விளையாட்டில் சட்டி பானை இடம் பெறவில்லை. எனினும் சிறுபிள்ளைகள் சட்டிகளாகவும், சற்றே பெரிய சிறுமியர் பானைகளாகவும் உருவகப்படுத்தப்படுகின்றனர். பானைசட்டி விளையாட்டு சமையலறையை நினைவூட்டுகிறது. துணி துவைத்தல் விளையாட்டு துவைக்கும் வேலையை நினைவூட்டுகிறது. அக்கக்கா சிணுக்கோரி விளையாட்டு, பெண்கள் தலையைச் சிடுக்கு எடுக்கப் பயன்படுத்தும் சிணுக்கோரியைக் குறிப்பிடுகிறது.


சிறுமியர் விளையாட்டுக்களில் அவர்கள் இல்லம், அதில் அவர்கள் செய்யும் வேலைகள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவைக் குறிப்பிடப்படுகின்றன என்பதை உணர முடிகிறது. எனவே சிறுமியர் விளையாட்டுக்கள் மிகச்சிறந்த பண்பாட்டுப் பிரதிபலிப்பு என்று குறிப்பிடலாம். இதனைச் சிறுமியர் விளையாட்டுக்களில் பெயர்களும் வலியுறுத்தப்பட்டு அமைகின்றன. குழுவாகக் கூடி விளையாடும் நிலையில் பலபயன்பாட்டுக் கூறுகளை இளம்பிஞ்சு உள்ளங்கள் தாமாகவே உணர்ந்துக் கொள்கின்றன. அதற்கு விளையாட்டுக்கள் வழிவகை செய்கின்றன.






முடிவுகள்


1. நாட்டுப்புற விளையாட்டுக்கள் மூவகையின. அவற்றுள் சிறுமியர் விளையாட்டுக்கள் ஒருவகை.


2. சிறுமியர் விளையாட்டுக்களில் இருவர், பலர் ஆடும் வகைகள் உள்ளன.


3. சிறுமியர் இல்லஞ்சார்ந்த இடங்களில் மட்டுமே விளையாடுகின்றனர்.


4. சிறுமியர் விளையாட்டுக்கள் உடல் வலிமையை வளர்ப்பதற்கு உதவுவதில்லை. மாறாகப் பொறுப்புணர்வு கீழ்ப் படிதல், கட்டுப்பாடு போன்ற பண்புகளை வளர்க்கின்றன.


5. சிறுமியர் விளையாட்டுக்கள் பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள், செய்யும் வேலைகள் போன்று உறவுமுறைகளைச் சுட்டுவதால் அவை மிகச் சிறந்த பயன்பாட்டுப் பிரதிபலிப்பாக விளங்குகின்றன.






நன்றி


வேர்களைத் தேடி






xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx